Monday, April 4, 2011

ராமநாதபுரம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் ! பாஜகவினர் பேட்டி !

கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை கிராமத்தில் கர்நாடக‌ பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர் ஏப். 4: ராமநாதபுரம் தொகுதி பாஜ., வேட்பாளர் துரைகண்ணனை ஆதரித்து கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, அதன் சுற்றுப்பகுதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பாஜ கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி ஆதரவு திரட்டினர். இது குறித்து பெங்களூரு பாரதிய ஜனதா நகர் செயலாளரும், கவுன்சிலருமான தனராஜ் கூறுகையில், ‘கர்நாடக மாநிலத்திலிருந்து பாஜவினர் 3ஆயிரம் பேர், தமிழகத்தில் ஆதரவு திரட்ட வந்துள்ளோம். அதில் ஒரு பகுதியாக 75 பேர் அடங்கிய நாங்கள் ஒரு குழுவாக திருப்பத்தூர், திருமயம், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறோம். ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை முக்கிய கட்சிகளின் சார்பில் 3 முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதனால் இஸ்லாமியர்களின் வாக்குகள் பிரிவதால் எங்கள் பாரதிய ஜனதா வேட்பாளர் துரை கண்ணன் அமோக வெற்றி பெறுவார் ‘ என்றார். அவருடன் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கவுன்சிலர் பழனி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் ராஜூ, கீழக்கரை இந்து முன்னணி முன்னாள் அமைப்பாளர் தவசிமணி, புல்லந்தை கிளை தலைவர் இளையராஜா, பாரதிய ஜனதா கீழக்கரை நகர் தலைவர் முருகேசன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.