Thursday, March 17, 2011

கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள ! ஆய்வு பணி தொடங்கியது

2008ல் நிறம் மாறிய கடல்



2009ல் உள் வாங்கிய கடல்


கடல் சீற்றம்

கீழக்கரை.மார்ச்.17

தமிழகத்தில் சுனாமிக்கு பிறகு கீழக்கரை கடலில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.நிறம் மாறுதல் ,கடல் சீற்றம்,கடல் உள்வாங்குதல் போன்றவை ஏற்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு மு்ன் ஜப்பானில் சுனாமி சுழன்றடித்த அதே நாளில் கீழக்கரை பகுதி கடல் சிறிது தூரம் உள்வாங்கியது.மேலும் சென்ற முறை சுனாமி ஏற்பட்ட போது இதே போல் நிகழ்ந்தது.இது ஒரு புறமிக்க மன்னார் வளைகுடாவை சேர்ந்த இப்பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாகவும் ,பவள பாறைகள் அழிக்கப்பட்டு வருவதையும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் சுட்டி காட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் இந்திய நிலஅளவை அமைப்பு நிறுவனம் கடல் சீற்றத்தை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் மேற்கு வங்காளத்திலிருந்து குஜராத் வரை கடல் மட்டம் குறித்து ஆய்வு பணி நடத்துகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கடல் நிலை குறித்து ஆய்வு செய்கின்றனர். கடல் மட்டம், கடலோர பகுதி அரிப்பு, கடல் சீற்றம், கடல் மட்டத்தின் உயரம் என பல்வேறு விதமாக ஆய்வு செய்கின்றனர்இதற்காக ஒரு குழு சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்கள் வழியாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து, கருவிகள் மூலம் கடல் மட்ட ஆய்வு பணியை தொடங்கினர். இப்பணியோடு சேர்த்து இப்பகுதி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறித்து்ம் ஆய்வுகள் மேற்கொள்ள பட வேண்டு்ம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது, உலகின் பல பகுதிகளி்ல் பாதிப்பை ஏற்படுத்திய சுனா்மி இப்பகுதியை தாக்காமல் பாதுகா்ப்பதில் இப்பகுதியில் அமைந்திருக்கும் குட்டி தீவுகள் மற்றும் பவள பாறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.மேலு்ம் இப்பகு்தி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறிதது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.




மாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்!

கீழக்கரை.மார்ச்.17.ராமநாதபுரம் மாவட்டம் சின்ன மாயாகுளத்தை சேர்ந்த ஜெயபால் மகன் ஆமோஷ் ராஜா(13). இவர் கீழக்கரையில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை 10 மணிக்கு வகுப்பு ஆசிரியரின் உத்தரவுப்படி வெளியில் உட்கார்ந்து படித்தார். அங்கு வந்த தலைமை ஆசிரியர் அசன் இபுறாகிம், எவ்வித காரணமும் இல்லாமல் மாணவரை முதுகில் தாக்கியதுடன்,செருப்பு காலால் மிதித்ததாகவும் மாணவர் தரப்பில் கூறப்படுகிறது.கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரிடம் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமை ஆசிரியர் அசன் இபுறாகிம் கூறியதாவது:மாணவர் சரியாக படிக்காததால் வகுப்பு ஆசிரியர் வெளியே உட்கார வைத்திருந்தார். மாணவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளே அனுப்பினேன். மாணவரை காலால் மிதித்ததாக கூறப்படுவது தவறான தகவல், என்றார்.

Tuesday, March 15, 2011

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீகிற்கு மீண்டும் ஒரு தொகுதி அளிக்கப்பட்டு 2லிருந்து 3 தொகுதிகளாக உயர்வு!

கீழக்கரை.மார்ச்.15.திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு முதலில் 3 தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டு பின்பு அரசியல் சூழ்நிலைகளால் 2 ஆக குறைக்கப்பட்டதாக திமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.தற்போது மீண்டும் வாணியம்பாடி,துறைமுகம்,நாகபட்டிணம் ஆகியவை கொண்ட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

திமுக சார்பில் அமைச்சர் சுப.தங்கவேலன் திருவாடனையில் போட்டி?



அமைச்சர் சுப.தங்கவேலன்
முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடனை மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகள் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை கடலாடியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் சுப.தங்கவேலன் தற்போது திருவாடனையிலும்,
முதுகுளத்தூரில் அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.

ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது?

கீழக்கரை.மார்ச்.15.ராமநாதபுரம் தொகுதி தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்ற முறை கடலாடி தொகுதியில் இருந்த கீழக்கரை நகராட்சி தற்போது தொகுதி மறு சீரமைப்பின் மூலம் ராமநாதபுரம் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது இந்நிலையில் சென்ற முறை ராமநாதபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கீழக்கரையை சேர்ந்த ஹசன் அலி வெற்றி பெற்றார். இம்முறை தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏ .அசன் அலி, செல்லதுரை அப்துல்லா,ரவிசந்திர ராமவன்னி,மெட்ரோ செய்யது ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் போட்டியிடுவார் என்பதாகவும் கீழக்கரை வாக்களர்களிடையே பேசப்படுகிறது.

யாருக்கு எந்த தொகுதி ,யார் வேட்பாளர் என்பது இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக தெரிந்து விடும்

ஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா!கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் பங்கேற்பு





கீழக்கரை.மார்ச்.14 திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மீலாது விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் ஷேக் முகம்மது தலைமை வகித்தார்.விழாக்குழு துணை தலைவர் சோலை ராஜு வரவேற்றார்.கல்லூரி செய்லாளர் அப்துல் கபூர் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை டவுன் ஹாஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை தீன்யாத் கல்வியின் ஒருங்கினைப்பாளர் மெகஸிர் நசீப்கான் வழங்கினார்.விழாக்குழு செய்லாளர் அப்துல் ஜமீல் நன்றி கூறினார்

Monday, March 14, 2011

முதல் முறையாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளருக்கு வாக்களிக்கும் கீழக்கரை வாக்காளர்கள்!

கீழக்கரை மார்ச் 13: தமிழகம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு 59 ஆண்டுகளுக்கு பின் கீழக்கரை வாக்காளர்கள் தொகுதி மறு சீரமைப்பில் ராமநாதபுரம் தொகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். ஊராட்சியாக இருந்து வந்த கீழக்கரை 1982ல் டவுன் பஞ்சாயத்து , 2004 ல் மூன்றாம் நிலை நகராட்சியாகவும்,கடந்த ஆண்டு இரண்டாம் நிலைக்கும் உயர்த்தப்பட்டது.கடலாடி சட்டசபை தொகுதியில் கீழக்கரை இடம் பெற்றதால் நகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.ஆகவே மறு சீரமைப்பில் கீழக்கரையை ராமநாதபுரம் தொகுதியில் இணைக்க பல்வேறு தரப்பினரும் கடும் முயற்சி மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கடந்த 13 சட்டசபை தேர்தலில் கடலாடி தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கீழக்கரை மக்கள், 14வது சட்டசபை தேர்தலில் ராமநாதபுரம் சட்டசபை தொகுதி வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ளனர்.

Saturday, March 12, 2011

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி !கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் 24ந்தேதி துபாய் வருகை


கல்லூரி முதல்வர் பேராசியர் அலாவுதீன்

கீழக்கரை.மார்ச்.12.கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசியர் அலாவுதீன் ஒரு வார பயணமாக வரும் மார்ச் 24ந்தேதி துபாய் செல்கிறார்.இது குறித்து அவர் கூறியதாவது, அமீரகத்தில் உள்ள எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களை சந்திக்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன்.மேலும் கலந்துரையாடல் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

கீழக்கரை அ.தி.மு.க நிர்வாகிகள் உள்பட 20பேர் திமுகவில் இணைந்தனர்


தி.மு.க வில் இணைந்த அ.தி.மு.க கீழக்கரை நிர்வாகிகள் சின்னக்கடைத்தெரு ஹாஜா முகைதீன் ,நஜிமுதீன்,ஜகுபர் சாதிக்,ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,பசீர் அகமது,துல்கருணை,செய்யது அகமது கபீர் ,நெய்னா முகம்மது சாகிபு ஆகியோரை படத்தில் காணலாம்

கீழக்கரை .மார்ச்.12.
கீழக்கரை முஸ்லீம் பஜாரில் தி.மு.க.தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் பஷீர் அகமது த்லைமை தாங்கினார்.தலைமை கழக் பேச்சாளர்கள் சரத்பாலா,அரவரசன்,மாவட்ட துணை செயலாளர் அகமது தம்பி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருப்புல்லாணி ஒன்றிய செயலர் சங்கு முத்துராமலிங்கம்,காஞ்சிரங்குடி ஊராட்சி உப தலைவர் முகபத்துல்லா,காங்கிரஸ் கமிட்டி நகர் தலைவர் ஹமீது கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர் துணை செயலாளர் நயினார்,நகர் கழக பொருளாளர் ஜகுபர் உள்பட ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க கீழக்கரை நிர்வாகிகள் சின்னக்கடைத்தெரு ஹாஜாமுகைதீன் ,நஜிமுதீன்,ஜகுபர் சாதிக்,ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா,பசீர் அகமது,துல்கருணை,செய்யது அகமது கபீர் ,நெய்னா முகம்மது சாகிபு உள்பட 20 பேர் திமுகவில் இணைந்தனர் .விழா நிறைவில் கென்னடி நன்றி கூறினார்.

உணர்ச்சிவசப்பட வேண்டாம்! அமீரக காயிதேமில்லத் பேரவை பொருளாளர் கீழக்கரை ஹமீது ரஹ்மான் அறிக்கை




மார்ச்.12.தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மேற்கொண்டிருக்கும் நிலை குறித்து அமீரக காயிதேமில்லத் பேரவையின் பொருளாளர் கீழக்கரை ஹமீது ரஹ்மான் ,அப்துல் ரஹ்மான்.எம்.பி அவர்களின் பேச்சை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது..

.தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் தமது அமைப்பை கலைத்து விட்டுஇந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் அவரை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆற்றிய உரையிலிருந்து....
இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களைப் பெற்று, கூட்டணியின் ஒற்றுமையை நிலை நிறுத்த காங்கிரஸ் கேட்ட மேலும் 3 தொகுதிகளுக்கான தீர்வு தி.முக - 1, பா.ம.க -1, என்றிருந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததை நாடறியும், இந்த அரசியல் பெருந்தன்மை டெல்லியில், குறிப்பாக தேசிய அளவிலான அரசியலில் தாய்ச்சபைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடித்தந்தது.

ஒரு தொகுதி குறைந்தால் நம்மில் பலர் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கொதித்தெழுகின்றனர், குமுறுகின்றனர். ஒரு தொகுதி குறைந்ததில் யாருக்கு மகிழ்ச்சி? எல்லோருக்கும் கவலைதான். ஆனால் தொலை நோக்குச் சிந்தனையோடு, மதவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என்ற ஒரே நோக்கில், மாநிலத்திலும், மத்தியிலும் நல்லாட்சிகள் நீடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு புது வியூகம் அமைத்து, தாமாகவே முன் வந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துப் பெரும்பங்காற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது.

தாய்ச்சபை தலைமையின் இந்த முடிவு மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல. அது வேறு என்பதனை நிரூபணம் செய்யும். சற்று பொறுத்திருந்து பாருங்கள். .....இவ்வாறு அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் தெளிவாக நமது தாய்சபையின் நிலை குறித்து விளக்கியுள்ளார்கள்.என்வே நாம் பொறுமையுடன் செயல்பட்டு உண்ர்ச்சி வசப்படாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு வென்று காட்டுவோம் .இவ்வாறு ஹமீது ரஹ்மான் அறிக்கையில் கூறியிள்ளார்

Friday, March 11, 2011

தி.மு.க. கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேற வேண்டும்!இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மண்டல செயலாளர் ஜாஹாங்கிர் அறிக்கை

கீழக்கரை ஜஹாங்கிர் அரூஸி

கீழக்கரை மார்ச்.11.தி.மு.க., சார்பாக முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை மீண்டும் தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மண்டல அமைப்பு செயலாளர் ஜஹாங்கீர் அரூஸி கூறியதாவதுஸ்பெக்ட்ரம் ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு,ஒரு குடும்ப ஆட்சி முறைகளால் தி.மு.க.,மீதும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மீதும் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மக்கள் கருதுகின்றனர்.ஏற்கனவே ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்றை தி.மு.க.,திரும்ப பெற்றுக் கொண்டதை தொண்டர்கள் ஏற்று கொள்ளவில்லை. மக்களின் வெறுப்புக்குரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை தொண்டர்கள் விரும்பவில்லை. இந்த கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை முஸ்லிம் லீக் தலைமை மேற்கொள்ள வேண்டும், என்றார்.

கீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்!பேய் உலாவுவதாக வதந்தி


2009ல் நடந்த விபத்து



சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்து

சில வாரங்களுக்கு முன் நடந்த விபத்து


விபத்துகள் நடைபெறும் இடம்

கீழக்கரை.மார்ச்.10.கீழக்கரையிலிருந்து ராமாநாதபுரம் செல்லும் சாலையில் வண்ணாந்துறை அருகே கீழக்கரை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலை வளைவில் வலப்புறம்,இடப்புறம் என்று சாலையின் இருபுறங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட விபத்துககள் நிகழ்ந்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் வேன் கவிழ்ந்து 6பேர் படுகாயமடைந்தனர்.தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது.பஸ்,லாரி,டிராக்டர்,பைக்,என்று விபத்தில் சிக்காத வாகனங்களே இல்லை என்ற அளவுக்கு விபத்துக்கள் நடந்துள்ளது.இவ்விபத்துகளில் பலர் உயிரழந்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்க நிர்வாகமும் விபத்து நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள்,வேக தடுப்புகள்,சாலைகளின் இருபுறமும் மைல் கல்கள் ஊன்றப்பட்டு அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் என்று விபத்தை தவிற்ப்பதற்கு பல் வேறு முறைகளை கையாண்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போது கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.அப்பகுதியை வாகனங்கள் கடக்கும் போது சல்,சல், என்று சலங்கை ஒலி கேட்பதாகவும்,இரவு நேரம் மல்லிகை மணம் வீசிவதாகவும்,அலறல் சத்தம் கேட்பதாகவும் கட்டு கதைகளை அளந்து விடுகின்றனர்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த செய்யது அப்தாகிர் கூறியதாவது, பேய்,ஆவி என்பதெல்லாம் வெறும் வதந்தியாகும்.வளைவில் அமைந்திருக்கும் சாலை சீராக இல்லை என்பதாலும்,வளைவு பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவதாலும் தான் விபத்துகள் ஏற்படுகின்றன.இப்பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிக அளவில் வேகத்தடைகளை நிறுவ வேண்டும் மேலும் தற்காலிகமாக போக்குவரத்து காவலர் ஒருவரை அப்பகுதியில் நியமிக்க வேண்டும் .குறிப்பாக இப்பகுதியை விபத்து பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்றார்.
.
பேய்,பிசாசு என்று வதந்திகளை பரப்புவது வாகன ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி மேலும் அதிக விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

Thursday, March 10, 2011

நலப்பணிகளில் ஈடுபட பதவி தேவையில்லை !சீனா தானா பேட்டி

"2011 ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ள கீழக்கரையை சேர்ந்தவர்" என்ற தலைப்பில் நமது கீழக்கரை டைம்ஸ் இணையதளத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பில் 637 பேர் தங்கள் எண்ணத்தை பதிவு செய்திருந்தனர்.
இதில் சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் 52 சதவீத ஆதரவையும்,மூர் டிராவல்ஸ் ஹசனுதீன் 19சதவீத ஆதரவையும்,நகராட்சி தலைவர் பசீர் அகமது,அசன் அலி.எம்.எல்.ஏ,மெட்ரோ செய்யது மற்றும் கோழிக்கடை புகாரி ஆகியோர் 13 சதவீத ஆதரவையும் பகிர்ந்து கொண்டனர்."இவர்கள் யாருமே இல்லை" என்பதாக 12சதவீதம் பேர் பதிவு செய்தனர்.
சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர்

இதுகுறித்து சீட் மற்றும் சீனா தானா அறக்கட்டளை தலைவரும் தொழிலதிபருமான சீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் கூறியதாவது,
இந்த இணையதளம் மூலமாக என்னுடன் சேர்த்து மற்ற 4 சகோதரர்களுக்கும் ஆதரவை தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.மேலும் நாம் தமிழகம் முழுவதும் நமது அறக்கட்டளைகள் மூலமாக ஏழை மாணவர்களுக்கு உயர் கல்விக்குதவி,சிறு கடனுதவி மற்றும் பல்வேறு சமுதாய நலபணிகளை அந்தந்த ஊர் ஜமாத்கள் ஒத்துழைப்புடன் செய்து வருகிறோம் என்பதை அனைவரும் அறிவார்கள்.எனவே தேர்தலில் நின்று எம்.எல்.ஏ மற்றும் எம்.பியாக் தேர்வு பெற்றுதான் மக்களுக்கு நலப்பணி செய்ய முடியும் என்பதில்லை எம்.எல்.ஏ மற்றும் எம்பியாக இல்லாமலே சமுதாய பணிகளை தொடர முடியும் என்பதே என்னுடைய எண்ணம். இந்த இணையதளத்தில் பங்கு பெற்ற அனைவரும் ஒருங்கினைந்து நலப்பணிகள் பலவற்றை சென்னையிலிருந்தோ அல்லது கீழக்கரையிலிருந்தோ செயல்படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.இது போன்ற நல்ல முயற்சிகளுக்கு என்னுடய முழுமையான ஒத்துழைப்பும்,ஆதரவும் உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார் .

மூர் டிராவல்ஸ் ஹசனுதீன்

கீழக்கரை இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் மூர் டிராவல்ஸ் ஹசனுதீன் கூறியதாவது, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.தற்போது மாவட்ட இளைஞர் காங்கிரஸ்சில் செயல்பட்டு வருகிறேன்.இது வரை தற்போது போட்டியிடும் எண்ணம் இல்லை ஆனால் ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு தலைமை உத்தரவிட்டால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
மெட்ரோ செய்யது

காங்கிரஸ் பிரமுகர் மெட்ரோ செய்யது கூறியதாவது,
நான் காங்கிரஸில் பல்லாண்டு காலமாக தொண்டாற்றி வருகிறேன்.ராமநாதபுரம் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுமானால் நிச்சயம் எனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.ராமநாதபுரம் தொகுதிகுட்பட்ட பெரும்பாலான ஊர்களில் நான் பல் வேறு சமூக பணிகள் ஆற்றியுள்ளேன்.எனவே இம்முறை எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு உள்ளேன் என்றார்.மேலும் பல்வேறு தரப்பினரும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் என்றார்.

கீழக்கரை மதிமுக பிரமுகர் கோழிக்கடை புகாரி கூறியதாவது, ராமநாதபுரம் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டால் நிச்சயம் சீட் கேட்பேன்.இப்பகுதியில் நான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. என்றார்

Tuesday, March 8, 2011

கீழக்கரை மகளிர் கல்லூரி விழாவி்ல் அமெரிக்க விஞ்ஞானி பங்கேற்பு



கீழக்கரை.மார்ச்.08 கீழக்கரையில் தாசீம் பீவீ மகளிர் கல்லூரி்யில் உலக மகளிர் தினம் மற்று்ம் மீலாது விழா நடைபெற்றது. பேராசிரியை தாஜூனிசா வரவேற்புரை நிகழ்த்தினார்,கல்லூரி முதல்வர் சுமையா தலைமையுரையாற்றினார்.ஜமாத்தே இஸ்லாமி தென் சென்னை தலைவர் முகம்மது ஆதில் சிறப்புரையாற்றினார். உலக அமைதி, பெண்களு்க்கான எதிரான வன்முறைகளை தடுப்பது, உள்ளிட்ட பாதுகா்ப்பு குறித்த வழிமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவிகள் உரையாற்றினர்.

சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் முன்னாள் மகளி்ரியல் துறை இயக்குநர் ரெஜினா பாப்பா,அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் லிராய் சிவர்ஸ் மற்று்ம் அவரது மனைவி அமெரிக்க ஹாவர்ட் பல்கலைகழகத்தி்ன் உலக கற்பித்தல் மையத்தின் நிர்வாக இயக்குநர் ஹெலன் கிளாரி ்சிவர்ஸ் ஆகியோ்ர் க்லந்து கொண்டனர். விழா நிறைவில் ராபியா மசூமா நன்றி கூறினார். விழாவி்ல் டாக்டர் சேகு அப்துல் காதர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கீழக்கரையில் மின்சாரத்துறையை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டன சுவரொட்டி





கண்டன சுவரொட்டி



உயர் அழுத்த மின் கம்பி தாக்கி உயிரழந்த கண்ணன்


கீழக்கரை.மார்ச்.07.கீழக்கரையில் கடந்த மாதம் கண்ணன் என்ற வாலிபர் டி.வி.எஸ்.50 யில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன் சென்ற லாரியின் மேல்பாகம் மின் கம்பியில் உரசி மின் கம்பி அறுந்து கண்ணன் மீது விழுந்ததால் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரழந்தார்.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கீழக்கரை கிளை சார்பில் மின்சாரத்துறையின் அலட்சிய போக்கை கண்டித்தும் ,உயிரழந்த கண்ணன் குடும்பத்தர்ருக்கு நிவாரணம் வழங்க கோரியும் கீழக்கரை முழுவதும் கண்டன சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்

Monday, March 7, 2011

வெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில் சரண்


திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர், சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த பூமா தேவி (21)யை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதுகுளத்தூர் அருகே மருதகத்தை சேர்ந்த சுதா (25)வை, கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இவரது முதல் மனைவி கடந்த பிப்., 28ல் மர்மமான முறையில் வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டார்.


ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் விசாரித்தனர். கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது தெரிய வந்து, போலீசார் தேடினர். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், "மனைவி தவறான நடத்தையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலால், வெளிநாட்டில் பணியில் கவனம் செலுத்த முடியாமல், திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தேன். அங்கிருந்து ஊருக்கு வந்து யாருக்கும் தெரியாமல் தங்கினேன். முதல் முறை கொலை செய்ய முயற்சித்த போது மூத்தமகன் வீட்டில் இருந்ததால், திரும்பி சென்று விட்டேன். இரண்டாவது முறை சென்ற போது குளித்து விட்டு பூமாதேவி தனியாக வெளியே வந்தார். அப்போது அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டேன்,' என தெரிவித்துள்ளார்.


Sunday, March 6, 2011

கீழக்கரையில் இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது


கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே இருதலைமணியன் பாம்பு பிடிபட்டது்.வனசர அலுவலர் ராஜேந்திரன்,வனவர் பழனிகுமார், வனகாப்பாளர் முத்துகருப்பன் ஆகியோர் படத்தி்ல் உள்ளனர்

Saturday, March 5, 2011

15 வருட வெளிநாட்டு வாழ்க்கை ? உருக்கமான கட்டுரை

2009ம் ஆண்டு முதுகுளத்தூர்.காம் என்ற வலைதளத்தில் வெளியான உருக்கமான கட்டுரை !
கட்டுரையில் குறிப்பிடபட்டிருக்கும் நபர் தற்போ்து தாய் நாட்டில் தொழில் செய்கிறார்

உங்கள் பார்வைக்கு ..

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
)

நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது.

இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த என் வாழ்க்கைச் சக்கரம் துபாய் மோகம் என்ற பேராசையில் சிக்கி தடம் புரண்டு விட்டது. ஆம் இந்த மோகம் எனக்குள் வந்ததல்ல, எனது தாய் வீட்டாரிடமிருந்து நற்போதனை என்ற மயக்க ஊசி மூலம் எனக்குள் ஏற்றப் பட்டது. ஊரிலிருந்து எவ்வளவு தான் உழைத்தாலும் எவ்வித முன்னேற்றமும் காணமுடியாது ! ஒரு இரண்டு வருடம் துபாய்க்கு போய் வந்தாலே போதும் வீடு, வாசல், நகை, பணம் என ஓரளவுக்கு சொத்து சேர்த்து விடலாம். பிறகு வேண்டுமானால் ஊரிலேயே ஏதாவதொரு கடைவைத்து பிழைத்துக் கொள்ளலாம். என்ற வசீகர திட்டத்தை கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது குடும்பத்தார் கூறிய திட்டமெல்லாம் உண்மையிலேயே நடந்து விட்டதை போன்ற உணர்வே எனக்குள் ஏற்பட்டது.

அப்போதே துபாய் மோகம் என்னும் நெருப்பு எனக்குள் கொழுந்து விட்டு எரிந்தது. திருமணம் முடிந்து இரண்டு மாதம் தானே ஆகிறது புது மனைவியை விட்டு பிரிவது நியாயமா? என்ற கேள்விக்கெல்லாம் கூட விடை கொடுக்க என் மனம் இசையவில்லை. காலம் தாமதிக்காது எனது ஊரின் முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து என்னை எப்படி யாவது துபாய்க்கு அனுப்பிவிடுங்கள். என்ன வேலையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கெஞ்சிக் கூத்தாடினேன். நான் ஒன்றும் படித்த பட்டதாரியல்லவே, படிப்புக்கேற்ற வேலை தேட! அதனால் தான் என்ன வேலையாக இருந்தாலும் என சொல்லி இருந்தேன்.
எனது ஆர்வத்தைப் பார்த்து அந்த நல்ல மனிதர் சம்பளம் குறைவாக கிடைக்கும் விசா,டிக்கெட்க்கு 50 ஆயிரம் செலவாகும் பரவாயில்லையா எனக் கேட்டது தான் தாமதம் துபாய்க்கே போனது போல் ஒரு நம்பிக்கை எனக்குள் பிறந்தது. எவ்வளவு சம்பளமானாலும் பரவாயில்லை என்னை எப்படியும் துபாய்க்கு அனுப்பி விடுங்கள் என்ற கோரிக்கை வைப்பதில் மட்டும் கொஞ்சமும் சுரத்துக் குறையாமல் பார்த்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் என்ற அந்த பெரிய மனிதர் ஒரு வழியா என்னை துபாய்க்கு அனுப்பி விட்டார். நானும் பல கனவுகளுடன் துபாய் வந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன.

என்னுடன் துபாய் வந்த எனது நண்பன் சுஹைல் மட்டும் சொல்லி வைத்தாற் போல இரண்டு வருடம் முடிந்ததுமே விசாவை கேன்சல் செய்து விட்டு தாயகம் போய் விட்டான். ஊரில் ஏதோ ஒரு பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக பிற நண்பர்களின் மூலம் கேள்விப்பட்ட ஞாபகமுண்டு. நான் துபாய் வந்து இரண்டு வருடம் முடியும் தருவாயில் விடு முறையில் ஊருக்கு போகலாம் என நினைத்து என் வீட்டாரிடம் அதாவது சகோதர, சகோதரிகளிடம் நான் ஊருக்கு வரப்போகிறேன் உங்களுக்கெல்லாம் என்ன வேண்டுமென கேட்டது தான் தாமதம் மிகப்பெரிய பட்டியலே வந்து சேர்ந்து விட்டது கடிதத்தின் வாயிலாக, அந்தப் பட்டியலுடன் ஒரு வேண்டுகோளும் இருந்தது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.

அதாவது உடனே வர வேண்டாம் துபாய் போய் இரண்டு வருஷம் தானே ஆகுது இன்னும் இரண்டு வருஷம் இருந்து உழைத்துவிட்டு கை நிறைய பணத்துடன் வந்தால் நல்லாயிருக்கும் என்ற வேண்டுகோள் தான் அது ! அந்தக் கடிதம் பார்த்ததுமே ஊருக்குப் போகும் எனது ஆசை யெல்லாம் கானல் நீராய் மாறிவிட்டது. எனது தாய், உடன் பிறந்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளித்த நான் என் மனைவியின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்காத குற்றவாளி யாகி விட்டேன்.

பிறகு ஒரு வழியா 4 வருஷம் முடிந்து ஊருக்கு பயணம் மேற்கொண்டேன் விடுமுறையில் தான் ! அதற்கு முன்பே கடைசி இரண்டு வாரங்களும் யார் யாருக்கு என்னென்ன வாங்க வேண்டுமோ? அதையெல்லாம் கொளுத்தும் வெயிலென்றும் பாராமல் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ஆசை ஆசையாய் வாங்கினேன். தாய், சகோதரிகள், மனைவிக்கு சேலைகள் எடுத்துக் கொண்டேன், மற்றபடி வாசனை திரவியங்கள், தைலங்கள், சோப்புகள் என வகை வகையாக வாங்கிக் கொண்டேன். நான் எடுத்த சேலைகளில் என் மனைவிக்கு கத்திரிப் பூ கலரில் ஒரு சேலையும் என் சகோதரிக்கு ஆரஞ்சுக் கலரில் ஒரு சேலையும் ரொம்ப ஆசைப்பட்டு எடுத்தேன்.

இந்த இரண்டு சேலை மட்டும் எடுப்பதற்காகவே சோனாப்பூரிலிருந்து ( Labour Camp Area ) டேரா பஜாருக்கு வெயில் நேரத்தில் போய் சேலையை எடுத்துக் கொண்டு என் அறைக்கு வருவதற்குள் வியர்த்த வியர்வையை டவலால் துடைத்து அதை இரு முறை பிழிந்தும் விட்டேன். ஆனாலும் டவல் ஈரமாகவே இருந்தது.

ஒரு வழியா வாங்கிய பொருட்களையெல்லாம் லக்கேஜாக கட்டி விட்டு நான்கு வருடம் கழித்து பெற்றோரை, உடன்பிறப்புகளை, மனைவியை காணப் போகிறோம் என்ற வெறித்தனமான ஆசையில் நான் அணிந்த ஃபேண்டில் பெல்ட் போட மறந்து விட்டேன். ஏர் போர்ட்டில் வந்து பார்த்த பிறகு தான் அதை உணர்ந்தேன். அதுவும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் இடத்தில் சக ஆண் பயணிகள் பெல்ட்டை கழற்றி பிளாஸ்டிக் தட்டில் வைத்த போது தான் எனது இடுப்புக்கும் கை வைத்து பெல்ட் போடாத உண்மையை கண்டு பிடித்தேன். அந்தளவுக்கு என் நினைவெல்லாம் என் குடும்பத்தைப் பற்றியே இருந்தது. பெல்ட் போடாததால் அடிக்கடி இடுப்பிலிருந்து கீழிறங்கிய எனது ஃபேண்ட்டை அவ்வப்போது மேல் தூக்கி விடும் போது சுகமான சுமை யாகவே இருந்தது ! விமானத்தில் அமர்ந்து விட்டேன் குறிப்பிட்ட நேரம் வந்ததும் விமானம் புறப்படப் போகும் தகவலை விமானப் பணிப்பெண் உணர்த்தினார் ஆம் இடையில் விமானம் பறக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் எப்படி உயிருடன் தப்பிப்பது? என்ற செய்முறை பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார்.

விபத்திற்குள்ளான விமானங்களிலிருந்து பாராசூட் மூலம் உயிர் தப்பிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கேட்டு விடாதீர் அதை கடைசி வரைக்கும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது! பிறகு ஏன் இந்த சடங்கு சம்பிராதயம்? எனக் கேட்கிறீர்களா? எல்லாம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கத்தான் !விமானம் மேலெழும்பியதும் சக பயணிகள் பாதுகாப்பான பயணத்திற்காக அவரவர் கடவுளை வேண்டினர்.
ஆனால் என் மனம் மட்டும் பறக்கும் விமான வேகத்தை விட தாயகத்தைப் பற்றிய பல சுகமான நினைவு களாய் சீறிப் பாய்ந்தன. ஊர் போனதும் மறக்காமல் நமக்கு கற்றுத் தந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் முத்துவேலை நேரில் பார்த்து சுகம் விசாரித்து விட வேண்டும். நம் வளர்ச்சியைப் பார்த்து (அதாவது என் தொப்பை வயிற்றை சொல்கிறேன்) ஆச்சர்யப்படுவார்.

காமெடி நடிகர் வடிவேலு பாஷையில் சொல்வதானால் ஆசிரியர் என்னைப் பார்த்ததும் அவனா …….. நீ? என்று கூட கேட்கலாம். பிறகு அவரது வகுப்பு மாணவர்களிடம் இவன் என் பழைய மாணவன் என நம்மை அறிமுகப்படுத்தும் போது நமக்குள் எவ்வளவு உற்சாகம் ஏற்படும் ! இன்னும் இது போன்ற பல எதிர்பார்ப்பு நினைவுகள் அசை போட ஆரம்பிக்கும் போதே விமானம் சென்னையில் தரையிறங்கி விட்டது. நான்கு மணிநேரம் போனதே தெரியவில்லை. சென்னை விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. முறையான பரிசோதனைகள் முடிந்து எனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தேன்.

என் கண்களின் தேடலை புரிந்து கொண்ட இளைய தம்பி அண்ணே…. எனக் குரல் கொடுத்தான் அவனைப் பார்த்ததும் தான் ஓரளவுக்கு பதற்றம் குறைந்தது. பிறகு என் தாய் மற்ற சகோதரர்கள், சகோதரிகள் என எல்லோரும் என் தலையை அன்பாக தடவிக் கொண்டே சுகம் விசாரித்தனர். இவைகளினூடே எனது இதயத்துடிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது. எல்லாம் என் ஆசை நாயகியை காண வேண்டும் என்ற பரபரப்புத்தான்! என் அண்ணிக்குப் பின்னால் வெட்கத்துடன் மறைந்து கொண்டு நின்றிருந்தாள் என் அன்பு மனைவி ! அவளை அருகில் போய் பார்த்த போது அப்பப்பா …… அந்த இனிமையை வர்ணிக்க வார்த்தையில்லை என்னைப் பார்த்த அவள் சிறிய சினுங்கலுடன் சொகமா இருக்கீங்களா? எனக் கேட்ட போது எனக்குள் நான் பாட ஆரம்பித்து விட்டேன். ஒரு வார்த்தை பேச காத்திருந்தேன் நான்கு வருஷம் …. இந்தப் பாட்டை என் மனசுக்குள்ளேயே பாடிக் கொண்டேன். பிறகு நலம் விசாரிப்புகள் முடிந்ததும் என் குடும்பத்தார் வந்த காரில் ஏறிக் கொண்டேன். கார் ஒரே சீரான வேகத்திலேயே எனது ஊரை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

ஆனால் என் மனம் மட்டும் ஒரே சீராக இருக்கவில்லை ! நான் சொன்ன மாடலில் வளையல் எடுத்தாயா? இது என் தங்கையின் கேள்வி? எனக்கு என்ன வாங்கினாய்? என்ற என் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முயன்ற போதே என் தாயார் குறுக்கிட்டு எம் மவன் பயணம் செய்து களைப்பா இருக்கான் அவனை தொந்தரவு செய்யாமல் ஓய்வெடுக்க விடுங்கள் என அரட்டியதும் தான் எனது லக்கேஜின் விசாரிப்புகள் நின்றன. டெக்னாலஜியின் உதவியுடன் உலகமே முன்னேறிக் கொண்டிருந்தாலும் சென்னையிலிருந்து எனது ஊருக்கு 12 மணி நேரம் பயணம் செய்வதென்ற தரித்திரம் மட்டும் மாறவே இல்லை. அதிகாலை புறப்பட்ட எனது பயணம் மாலையில் தான் முடிந்தது. ஆம் எனது ஊருக்குள் வந்து விட்டேன் குறுக்கும் நெடுக்குமாக இருந்த தெருவுக்குள் வளைந்து வளைந்து கார் போனது. அந்தத் தெருவின் கடைசி வீடு என்னுடைய ஓட்டு வீடு தான். ஒரு வழியா காருக்குள் ளிருந்து வெளியில் வந்த நான் எனது வீட்டின் வாசலில் கையில் ஆரத்தி தட்டுடன் நின்ற என் மனைவியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அப்படியானால் நாம் சென்னை ஏர் போர்ட்டில் பார்த்தது? பாட்டுப் பாடியது? எல்லாமே என் மனப்பிரம்மை தான் என்பதை சில விநாடி களிலேயே உணர்ந்து கொண்டேன்.

உண்மையாகவே என் மனைவி சென்னைக்கு வரவில்லை. காரணம் நான் ஊர் வரும் போது ஆரத்தி எடுக்க ஆள் வேண்டுமாம், அதனால் தான் என் மனைவியை மட்டும் அழைத்து வரவில்லை என என் வீட்டார் சொன்னார்கள். இந்த ஆரத்தி முறையை கண்டு பிடித்தவன் மட்டும் அன்று எதிரில் கிடைத்திருந்தால் அவனை உண்டு இல்லை என ஆக்கியிருப்பேன். அவ்வளவு கோபம். என் மனைவியின் ஆரத்திக்குப் பிறகு வீட்டுக்குள் போய் குளித்து விட்டு புதிய ஆடையணிந்து ஹாலில் வந்து அமர்ந்தேன். என்னை நலம் விசாரிப்பதற்காக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் வந்து போயினர். இரவு ஒன்பது மணியாகி விட்டது.

இனியும் குடும்பத்தாரின் பார்சல் பிரிப்பு ஆர்வத்திற்கு தடை போட விரும்பாமல் பார்சலை பிரித்து அவரவருக்குரியதை பங்கு வைத்து கொடுத்தேன். ஒரு வழியா பாகப்பிரிவினையெல்லாம் முடிந்து இரவு உணவருந்தி விட்டு பயணக்களைப்பால் சோர்ந்து போயிருந்த என் கண்களுக்கு ஓய்வு கொடுத்தேன். நான்கு வருடம் கழித்து குடும்பத்தை பார்த்த பரவசத்தில் கண்கள் நன்றாய் உறங்கி விட்டன. காலையில் எழுந்து குளித்து முடித்து காலை உணவை முடித்ததும் மனைவியை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு போனேன். அங்கே ராஜ மரியாதை கிடைத்தது. வாய்க்கு ருசியான மட்டன் பாங்கா, நெய் சோறு சாப்பாட்டை முடித்ததும் நானும் என் மனைவியும் தனியறைக்குள் போய் வாயில் வெற்றிலை மென்று கொண்டே நான்கு வருட பிரிவின் சோகத்தை வார்த்தைகளால் பரிமாறிக் கொண்டிருந்தோம்.

திடீரென ஒரு கூச்சல் சப்தம் வந்ததும் பதறியடித்து அறையை விட்டு வெளியே வந்தேன் சிறிதும் தாமதமின்றி என் கால் அருகில் வந்து விழுந்தன ஆரஞ்சுக் கலர் சேலை ஆமாம், நான் வெயிலில் அலைந்து என் சகோதரிக்காக ஆவலுடன் எடுத்த அதே ஆரஞ்சுக்கலர் சேலை தான் ! சேலை வந்த திசையை நோக்கினேன் வாசலில் என் சகோதரி கண்களில் கோபம் கொப்பளிக்க நின்று கொண்டு இதையும் உன் பொண்டாட்டிக்கே கொடுத்து விடு ! இந்த நாத்தம் பிடித்த சேலை எனக்கு வேண்டாம். அவள் உன்னை வசியம் பண்ணி மயக்கி விட்டாள். அதனால் தான் அவளுக்கு விலை உயர்ந்த சேலையும் எனக்கு விலை குறைந்த சேலையுமாய் எடுத்திருக்கிறாய்.

சமீப காலமாக உனது நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிகிறது போன மாசம் ஊர் வந்த நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் உம் பொண்டாட்டிக்கு கேமரா வைத்த மொபைல் போன் வாங்கி கொடுத்து விட்டியாமே, எல்லாம் எங்களுக்கு தெரியா தென்றா நினைத்து விட்டாய்? திடீரென பொண்டாட்டி மோகம் வந்து விட்டதோ? இதெல்லாம் நீயாக செய்ய வில்லை எல்லாம் அவள் செய்துள்ள மருந்து மாயம் தான். எத்தினி நாளைக்கு இந்த மோகம்? நானும் பார்த்திர்ரேன் என மூச்சு விடாமல் பத்ரகாளி ஆட்டம் ஆடி விட்டு வெடுக்கென போகிறாள். அவள் போன திசையை பார்த்தேன் நல்லவேளை தெரு வெறிச்சோடி கிடந்தது. தெருவில் என் சகோதரி மட்டுமா போகிறாள் கூடவே எனது சந்தோஷத்தை யுமல்லவா பிடுங்கிப் போகிறாள். அவள் தூக்கியெறிந்தது சேலையை மட்டுமல்ல, அதில் இருந்த எனது உழைப்பின் வியர்வையையும் தான் !
பாவம் என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை சகோதரிக்கு எடுத்த சேலையை விட 10 திர்ஹம் விலை குறைவென்பது எனக்கும் அந்த ஆண்டவ னுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். பிறகு ஏன் இந்த கலவரம்? விலை குறைவான எனது மனைவியின் சேலை கலரும், டிசைனும் ஏதோ விலையுயர்ந்த ரகம் போல் காட்டி விட்டது ! அதனால் வந்த வினை தானோ? இது. எந்தவொரு விஷயத்தையும் வெளித்தோற்றத்தை மட்டுமே வைத்து எடை போடும் நாசகார சிந்தனை இன்னுமா மனிதர்களுக்குள் இருக்கிறது? நல்லதுக்கே காலமே கிடையாது என்பதை சாதாரண இந்த சேலை விவகாரத்திலேயே புரிஞ்சிகிட்டேன்.

சரி ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம், என் மனைவிக்கு எடுத்த சேலையின் விலை மற்றவர்களுக்கு எடுத்ததை விட அதிகமாகவே இருக்கட்டுமே, இதில் என்ன குற்றம் உள்ளது? என்னை நம்பி வந்த அவளுக்கு நானே உரிமையாகிவிட்ட பிறகு எனது பணமும், பொருளும் உரிமையாகதா? அவள் என்ன விலை கொடுத்து வாங்கப்பட்ட அடிமையா? இன்னும் சொல்லப்போனால் என் மனைவிக்கு நான் தானே அடிமை ! அவள் என்னைத்தானே விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். ஆம் வரதட்சிணை எனும் லட்சங்களையும், மோட்டார் பைக், தங்கச் செயின் உள்ளிட்ட சீர் பொருட் களையும் விலையாக கொடுத்து தானே என்னை மாப்பிள்ள யாக ஏற்றுக் கொண்டாள்.

லட்சங்களை வாரி கொடுத்தபோது என் வீட்டாரால் மதிக்கப்பட்ட என் மனைவி இப்போது தீண்டத்தகாதவளா? ஏன் இந்த முரண்பாடு? சகோதரிகளாய் இருப்போரே கொஞ்சம் மனச்சாட்சியுடன் நடக்க கூடாதா? என சத்தம் போட்டு தெருவில் கத்த வேண்டும் போல் இருந்தது. காரணம் நான் துபாய்க்கு வந்ததே என் மனைவி யின் நகைகளை விற்றுத்தான் ! இவ்வளவு தியாகத்தையும் செய்துள்ள என் மனைவிக்கென்று இந்த நான்கு வருடத்தில் பெரிதாக எதுவுமே செய்திடவில்லை எனக்குத் தெரிந்த வரைக்கும் என் சகோதரி சொன்னது போல் நடுத்தெரு ஹாஜா கனி மகன் ராவுத்தரிடம் கொடுத்து விட்டது மற்றபடி எதுவுமே கொடுத்துவிடவில்லை. ஏன் எனக்கு எதுவும் தரவில்லை என்றோ, எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என என்றைக்குமே என்னிடம் வாக்குவாதம் செய்யாத என் மனைவியை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்ததை தான் என்னால் ஜீரணிக்கவே முடியல.

நான்கு வருடங்கள் கொதிக்கும் பாலைவன மணலில் கல்லையும், மண்ணையும் சுமந்து காய்த்துப் போன கைகளுடன் திட்டு திட்டான பித்த வெடிப்பு கால்களுடன் ஒரு இரண்டு மாதம் ஊருக்குப் போய் நிம்மதியாக ஓய்வெடுக்கலாம் என வந்துள்ள எனக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் பரவாயில்லை இருக்கும் நிம்மதியையாவது பிடுங்காமல் இருந்திருக்கலாமே? என நினைத்து அழுதே விட்டேன் பாலைவன நெருப்புக் காற்றில் கஷ்டப்பட்ட போது கூட நான் அழுததில்லை !

ஆனால் இப்போ அழுகிறேன். எந்த குடும்பத்தின் சந்தோஷத்திற் காகவும், வசதிக்காகவும் என் உணர்ச்சிகளை சாகடித்து விட்டு இளம் மனைவியை தனிமையில் தவிக்க விட்டுட்டு துபாய் வந்து உழைத்து ஓடாய் தேய்ந்து ஒரு வேளை உணவு மறுவேளை உண்ணா நோன்பென்று செலவை சிக்கனப்படுத்தி பணம் சேர்த்து கொடுத்தேனோ? இப்போ அதே குடும்பம் தான் எனக்கெதிராக உள்ளது ! உணர்ச்சி வயப்பட்ட நிலையில் வேதனையுடன் நின்றிருந்த எனது தோளில் ஆறுதலாக கை வைத்து அமரவைத்தாள் என் மனைவி. தேவையில்லாமல் என்னால் உங்கள் குடும்பத் திற்குள் சண்டை வேணாங்க,

எனக்கு தந்த கத்திரிப்பூ கலர் சேலையையும் உங்கள் சகோதரிக்கே கொடுத்திடுங்க உங்கள் உண்மையான அன்பு மட்டுமே போதும்ங்க என்ற எனது மனைவியின் முகத்தை பார்த்தேன் அதில் என் மீதான கரிசனம் மட்டுமே தெரிந்தது. ஒரு சேலை கலவரத்தால் அன்றைய சுகமான பகல் உறக்கத்தை தொலைத்து விட்டேன். மாலையில் முகம் அலம்பி மனைவி கையால் தேநீர் அருந்தி விட்டு மீண்டும் என் வீட்டிற்கு போனேன். வாசலில் அமர்ந்து பக்கத்து வீட்டு பாட்டிம்மாவுடன் பேசிக் கொண்டிருந்த எனது தாயார் என்னைக் கண்டதும் சந்தோஷ மாக வா தம்பீ சாப்பிட்டியா? முகமெல்லாம் வாட்டமா யிருக்கு ஏன் பகலில் தூங்கலியா? என அதிக அக்கறையுடன் கேட்டதை வைத்தே பகலில் சகோதரி வந்து ஆடிய ஆட்டம் நம் தாய்க்கு தெரிந்திருக்கவில்லை என்று யூகித்துக் கொண்டேன்.

பிறகு வீட்டிற்குள் போன என்னை அம்மாவைத் தவிர யாருமே கண்டு கொள்ளவில்லை. இப்படியே இரண்டு மாதங்களும் உருண்டோடி விட்டன. மீண்டும் எனது துபாய் பயணத்திற்கான நாளும் வந்து விட்டது. பயணம் புறப்படுவதற்கு முதல் நாள் இரவில் கனத்த இதயத்துடன் தேம்பி, தேம்பி அழுத என் மனைவியின் அழுகையை என்னால் நிறுத்த முடியலை. நீங்கள் ஏன் துபாய் போகிறீர்கள்? பேசாமல் இங்கேயே ஏதாவது வியாபாரமோ, அல்லது கடையிலோ வேலை பாருங்கள். குறைந்த வருமானமாக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் துபாயி லிருந்து தரும் மாசக் காசு 1500 ரூபாயை இங்கிருந்து தர முடியாதா? உங்கள் கை, கால்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வருதுங்க இனிமேலும் பாலை வனத்தில் கஷ்டப்படாதீங்கமா ப்ளீஸ் ! என்று எனது கைகளை பிடித்து கெஞ்சிய போது ஏறத்தாழ ஒரு குழந்தையை போலவே மாறியிருந்தாள் எனது மனைவி. கவலைப்படாதே, இன்னும் இரண்டே வருஷம் தான் ! ஓரளவுக்கு சம்பாதித்து விட்டு கேன்சலில் ஊர் வந்து விடுகிறேன். பிறகு நாம் நினைத்தது போல் இங்கேயே ஏதாவதொரு வியாபாரம் செய்து கொண்டு காலத்தை ஓட்டிடலாம் என நான் கொஞ்சம் நம்பிக்கையுடன் கூறிய பிறகு தான் என் மனைவி சமாதானமடைந்தாள்.

பின்னர் பொழுது விடிந்து பயணத்திற்கான ஆயத்தங்கள் வெகு ஜோராக நடந்தன. குடும்பத்தார் அனைவரின் வீட்டிற்கும் நேரில் போய் பயணம் சொன்னேன் ஒவ்வொரு வீட்டிலும் அவரவர் சக்திகேற்ப 51, 101 என வெற்றிலையும் பணமும் தந்தனர். தொலை தூர பயணம் செல்லும் போது வெற்றிலை பணம் கொடுக்கும் கலாச்சாரத்தைக் கண்டு பிடித்தவர் 501, 1001 என நிர்ணயம் செய்திருக்க கூடாதா? என்று என் உள் மனம் கேட்டுக் கொண்டது ! ஒரு வழியா குடும்பத்தார் எல்லோரிடமும் பயணம் சொல்லிவிட்டு நண்பகல் ஒரு மணிக்கு வீடு வந்தேன். மனைவி பகல் உணவை எடுத்து வைத்து பரிமாறினாள் எனக்கோ வயிற்றுப்பசி அறவே இல்லாததால் சாப்பாட்டின் மீது ஆர்வமின்றி இருந்தேன். அப்போது எனக்கிருந்ததெல்லாம் நம் மனைவியை விட்டு இன்னும் இரண்டு வருஷம் பிரியப் போகிறோமே என்ற கவலை தான் என்னை அணுஅணுவாய் சாகடித்தது. என் நிலையை புரிந்து கொண்ட மனைவி சட்டென சாப்பாட்டை யெல்லாம் ஒடுக்கி வைத்து விட்டு எனது மடியில் விழுந்து அழத்தொடங்கினாள்.

பயணம் புறப்பட இன்னும் இரண்டு மணி நேரமே இருக்கிறது என்பதை நினைத்து ஒவ்வொரு நொடியின் மீதும் எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. அழுதழுது வீங்கியிருந்த என் மனைவியின் நெற்றியில் உச்சி முகர்ந்து விட்டு அழுது வடிந்த எனது முகத்தையும் சோப்பு போட்டு கழுவி பின்னர் ஃபேண்ட், சர்ட் அணிந்தவனாய் சுண்ட வைத்து காய்ச்சித் தந்த பசும்பாலை மட்டும் சம்பிரதாயத் திற்காக குடித்தேன். வாசலில் ஆட்டோக்காரன் மெட்ராஸ் பஸ் கிளம்ப இன்னும் ½ மணி நேரமே உள்ளது சீக்கிரம் கிளம்புங்க என்று குரல் கொடுத்தான். எனது லக்கேஜ்கள் ஆட்டோவில் ஏற்றப்பட்டு நானும் எனது மனைவியும் ஆட்டோவில் உட்கார்ந்து கொண்டோம். எனது தாய் சகோதரிகள் மற்றொரு ஆட்டோவில் பின்னால் வந்து கொண்டிருந்தனர். சென்னைக்கு செல்லும் சொகுசு பஸ் நிறுத்தம் வந்ததும் முன்னதாக எல்லோரிடத்திலும் கை குலுக்கி விட்டு விடை பெற்றுக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமரவும் பஸ் கிளம்பவும் சரியாக இருந்தது. எனது பூத உடலைத்தான் பஸ் சுமந்ததே தவிர உயிரை அல்ல ! காரணம் உயிர் என் மனைவியின் நினைவோடு கலந்து விட்டது. செய்யாத கொலைக்கு ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியின் மனநிலை எப்படியோ? அப்படித்தான் சென்னை புறப்பட்ட அன்று எனக்கும் இருந்தது. குடும்பத்தார் களெல்லாம் சிரிக்க நான் மட்டும் அழவேண்டுமா? என்ன நியாயம் இது?

பஸ் பயணம் முடிந்து சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலைய பரிசோதனைகள் முடிந்த பின் தொலைபேசி மூலம் ஊரில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லி விட்டு துபாய் வந்து சேர்ந்து விட்டேன். சென்னையிலிருந்து துபாய்க்கு பறந்து கொண்டிருந்த நான்கு மணி நேரத்தில் எத்தனை எத்தனை கேள்விகளால் என்னையே நான் கேட்டுக் கொண்டேன். நான்கு வருடம் கழித்து தேவைக்கு மேல் சாமான்களும் வாங்கி கொண்டு ஊர் போய் கிடைத்த இரண்டு மாத விடுமுறையை ஜாலி பண்ணிவரலாம் என்று நினைத்து போன எனக்கு எவ்வளவு மன உளைச்சல்களை குடும்பத்தினர் தந்து விட்டனர்.
சேலை நல்லா இல்லை என்பது ஒரு பிரச்சினை, கேட்ட ஸ்பிரே வாங்கி வரலை என இன்னொரு பிரச்சினை, வளையல் டிசைன் சரியில்லை என்ற மற்றொரு குறை, தன் கணவனுக்கு கேமரா மொபைல் போன் வாங்கித் தரலையென்று அக்காவின் கோபம் என ஒவ்வொரு கோணத்திலும் நான் சந்தித்த பிரச்சினை யெல்லாம் எனக்குத் தேவையா? நான் மட்டும் உள்ளூர் உழைப்பாளியாக இருந்தாதிருந்தால் இந்த ஈனத்தனமான சண்டைகள் வந்திருக்குமா? நான் சுமந்து போன பார்சலின் மீதான பாசத்தை கூட என் மீது வைக்காத குடும்பத்தினரின் செயலை என்னவென்று சொல்வது? நான் யாருக்காக துபாய் வந்தேன்? உங்களுக்காகத்தானே, மாதம் தவறாமல் தேதி வைத்து அனுப்பிய பணமெல்லாம் உங்களின் தேவைகளுக் காகத்தானே, அனுப்பினேன்.

வாங்கிய சம்பளம் பற்றாக்குறை என தெரிந்ததும் பண்டிகைக்கு புதுத்துணியெல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அந்த வருடத்தின் பண்டிகைக்கு நான் மட்டும் பழைய துணியையே உடுத்தி கொண்டு கையிலிருந்த பணத்தை யெல்லாம் உங்களின் சந்தோஷத்திற்காக அனுப்பி வைத்தேனே ! இந்த தியாகத்திற்கெல்லாம் மரியாதை இல்லாமல் ஆக்கி விட்டீர்களே ! எனது குடும்பமே உங்களிடம் தான் கேட்கிறேன் ! இது போன்ற பல கேள்வி களை எனக்குள் கேட்டுக் கொண்டே வந்ததில் விமானம் துபை ஏர்போர்ட்டில் தரை இறங்கப் போவதை கூட உணர முடியாமல் போய் விட்டது. விமானப் பணிப்பெண் பெல்ட் போட சொன்ன போது தான் ஊர் சிந்தனையை உடைத்து விட்டு துபாய் வாழ்க்கைக்கு திரும்பினேன்.
பிறகு மீண்டும் ஊர் சென்றேன் இப்படியே 15 வருஷ என் துபாய் வாழ்க்கை யில் மொத்தமே ஐந்து முறை தான் ஊர் சென்றுள்ளேன். ஊரில் எனது மனைவியுடன் நான் வாழ்ந்த காலம் வெறுமனே 11 மாதம் 16 நாட்களாகும்.

15 வருஷத்தில் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே எனது மனைவியுடன் வாழ்ந்த தால் என்னவோ? இது வரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியமும் இல்லை. ஒரு முறை ஊர் சென்றிருந்த போது மருத்துவரிடம் போய் உரிய சிகிச்சை எடுத்து கொண்டோம். நானும் எனது மனைவியும் ! அப்போது மருத்துவர் கூட எதற்கும் நீங்கள் விசாவை கேன்சல் செய்து விட்டு ஒரு வருஷமாவது ஊரில் இருந்து பாருங்கள். ஒரு வேளை குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கலாம். என சொல்லிய விஷயத்தை எனது வீட்டாரிடம் கூறினேன். சரி பரவாயில்லை டாக்டர் சொன்ன மாதிரி துபாயை முடித்து விட்டு ஒரு வருஷம் ஊரில் தான் இருந்து பாரேன். அப்படி யாவது குழந்தை பிறக்கட்டுமே என சொல்லி இருப்பார்கள் என்று நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள்.

டாக்டரென்றால் எதையாவது சொல்லத்தான் செய்வார் அப்பத்தான் அவருக்கும் பிழைப்பு ஓடும். நம் குடும்பத்தில் யாருக்கு பிள்ளை இல்லை? உனக்கு மட்டும் இல்லாமல் போவதற்கு ஆண்டவன் நாடும்போது எல்லாம் தானாக நடக்கும். தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக் கொள்ளாமல் துபாய் கிளம்புற வழியைப்பாரு என என் வீட்டார் சொன்ன போது என் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? நான் என்ன சிறிய வயதுக்காரனா? எப்போ வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என நினைப்பதற்கு எனக்கும் வயது 41 ஆகி விட்டது. எனது மனைவிக்கும் வயது 38 ஆகிவிட்டது. இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதி போல் மறுப்பேதும் கூறாமல் உடனே துபாய் கிளம்பிவிட்டேன்.

இப்போது எனது துபாய் வாழ்க்கைக்கு வயது 15 நான் முதன் முதலில் துபாய் வரும் போது என் வீடு எப்படி இருந்ததோ? அப்படியே தான் இப்போதும் அதே பழைய வீடாகவே இருக்கிறது. அப்படி யானால் எனது 15 வருஷ உழைப்பு என்னாச்சு?

கடைசியாக நான் ஊர் போயிருந்தபோது என் மனைவி வீட்டிற்கான மளிகை சாமான்கள் வாங்குவதற்கு எனது ஊரிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நகரத்தில் இருக்கும் பிரபலமான J.J. சூப்பர் மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம் நானும் என் மனைவியும், ஷாப்பிங் முடித்து விட்டு பணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பொருட்களுக்கெல்லாம் பில் போடப்பட்டபோது வேறு யாரோ எடுத்து வைத்த இரண்டு பிளாஸ்டிக் குடமும் என் பில்லோடு சேர்க்கப்பட்டதை அறிந்து குடத்தை ரிட்டர்ன் செய்து விடுமாறு காசாளரிடம் வலியுறுத்தினேன்.

ஆனால் அவர் ரிட்டர்ன் செய்ய முடியாது பில் போட்டது போட்டது தான் என வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான் உன் முதலாளியை காட்டு நான் அவரிடம் பேசிக் கொள்கிறேன் என சொன்னதும் மிகவும் நக்கலாக மாடியில் இருக்கிறார் போய் பார்த்து விட்டு வா என காசாளர் ஓர்மையில் பேசிவிட்டான்.

இந்த மன உளைச்சலுடன் பக்க வாட்டிலிருந்த மாடிப்படியேறி முதலாளியைப் பார்க்க வந்த விஷயத்தை அவரது அறைக்கு வெளியிலிருந்த இளம் பெண்ணிடம் கூறினேன். சில நிமிட காத்திருப்புக்குப் பின் முதலாளி அறைக்குள் செல்லுமாறு அப்பெண் கூறியதும் நான் உள்ளே நுழைந்து மரியாதை நிமித்தமாக கை குலுக்க அருகில் சென்ற போது அதிர்ச்சி அடைந்து விட்டேன். அவர் வேறு யாருமில்லை.
15 ஆண்டுகளுக்கு முன் என்னுடன் துபாய் வந்து இரண்டே வருஷத்தில் கேன்சலில் ஊர் வந்து பெட்டிக்கடை வைத்து கஷ்டப்படுவதாக கேள்விப்பட்ட அதே சுஹைல் தான் ! என்னப்பா சுஹைல் எப்படி இருக்கிறாய்? என கேட்ட என்னை அவருக்கு அடையாளம் தெரியவில்லை போலும் நீங்கள் யார்? என திருப்பி கேட்டு விட்டார்.

ஏனென்றால் 15 வருடத்திற்கு முன்பு பார்த்த என்னை இப்போது முழு வழுக்கைத்தலையுடனும், நரைத்த தாடியுடனும், பெருத்த தொப்பையுடனும் பார்த்ததால் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. ஆமாம் வலுக்கைத் தலை, நரைத்தாடி, தொப்பை இவைகளெல்லாம் நீண்ட காலம் துபாயில் இருப்பவர்களுக்கு ஏற்படும் மறைக்க முடியாத அடையாளங் களாகும்.

பிறகு என்னை கடை முதலாளி சுஹைலுக்கு நினைவு படுத்திய போதுதான் ஓரளவுக்கு புரிந்து கொண்டவரைப் போல மெலிதாக சிரித்து விட்டு எனது புகாரை ஏற்றுக்கொண்டு காசாளரை என் முன்னாலேயே கண்டித்துவிட்டு இரண்டு பிளாஸ்டிக் குடத்தையும் ரிட்டர்ன் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினார். ஒரு வழியா மற்றவை களுக்கு பணம் கொடுத்து விட்டு வெளியில் வந்த நானும் என் மனைவியும் காரில் ஏறி ஊர் திரும்பினோம்.

மிதமான வேகத்தில் ஆற்றை ஒட்டிய ஒற்றையடி சாலையில் கார் சீராய்ப் போய்க் கொண்டிருந்த போது என் நினைவெல்லாம் J.J. சூப்பர் மார்க்கெட் சுஹைலைப் பற்றியேத்தான் இருந்தது. பெட்டிக்கடை வைத்தவனா இன்று இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் ஓனர்? அதிலும் 40 பேருக்கு மேல் சம்பளம் கொடுக்கும் அளவுக்கு முன்னேறி இருக்கானே, சுஹைல் எங்கே? நான் எங்கே? என சிந்தித்தவனாகவே என் வீடு வந்து சேர்ந்தேன். இதுபோன்ற பழைய நினைவுகளும் எனது குடும்பத்தாரின் போக்குகளும் துபாயில் உள்ள என்னை தடுமாற செய்கிறது.

துபாய் போனால் குறுகிய காலத்தி லேயே பணக்காரனாகி விடலாம் என கனவு காண்போரே, இதேக் கனவுடன் துபாய் வந்து என்னைப் போல கஷ்டப்படும் சக உழைப்பாளிகளே, 15 ஆண்டுகளாய் பாலைவனத்தில் உழைத்த நான் இப்போதும் கையில் எவ்வித சேமிப்புமில்லாமல் முதன் முதலில் துபாய் வரும் போது எப்படி இருந்தேனோ அப்படியேத்தான் கஷ்டப்பட்ட நிலையில் இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போகும் போதும் நான் வாங்கி செல்லும் சாமான்களால் எனது குடும்பத்திற்குள் ஏற்படும் தேவையற்ற சண்டை சச்சரவுகள் மட்டும் தான் எவ்வித குறைவுமின்றி முன்னேற்றம் கண்டு வருகிறது !

குழந்தையில்லாமல் இருக்கும் எனக்கு மீண்டும் விடுமுறை காலம் நெருங்குகிறது. இப்போது சொல்லுங்கள் நான் மறுபடியும் விடுமுறை யிலேயே ஊர் செல்லவா? அல்லது கேன்சலில் ஊர் செல்லவா?

Posted by admin on Jul 29th, 2009 நன்றி:- http://www.mudukulathur.com/

__________________________________________________________________________

குறிப்பு:- கட்டுரையில் குறிப்பிடபட்டிருக்கும் நபர் சொந்த ஊர் சென்று ஊரிலேயெ தொழில் செய்கிறார்


Friday, March 4, 2011

கீழக்கரையில் விளம்பர போர்டுகள் அகற்றம்



தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து கீழக்கரையில் விளம்பர போர்டுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றுகின்ற்னர்

பகலில் எரியும் தெரு விளக்கு!அசத்தும் நகராட்சி !


கீழக்கரை.மார்ச்.5

நீரின்றி அமையாது உலகு என் பது போல் இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரமின்றி மனித வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தற் போதைய மக்கள் தொகை பெருக் கத்தினால் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தி இல்லாத காரணத்தினால் தமிழகத்தில் தினசரி மூன்று மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. இவை தவிர பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் மாதத்திற்கு ஒரு நாள் 9 மணி நேரம் மின்சாரம் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மேலும், மின் வாரியம் மூலம் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பல்வேறு வகைகளில் விளம்பரம் செய்து வருகிறது. அதில் அதிக மின்சாரம் உபயோகமாகும் மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வலியுறுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிக வீடுகளில் போடப் பட்டுள்ள குண்டு பல்புகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தில் அதிக வெளிச்சம் தரும் அதே நேரத்தில் வெப்பத்தை வெளியிடாத "சி.எப்.எல்.,' பல்புகளை மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மின்சாரப் பற்றாக்குறை காரணமாக கட்டாய மின் வெட்டு அமல்படுத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் கீழக்கரை நகராட்சியின் அலட்சியத்தால் பட்டப் பகலில் கீழக்கரையில் தெரு விளக்குகளை எரியவிட்டு மின்சாரம் விரயமாக்கப்பட்டு வருகிறது.ஊருக்கு்தா்ன் உபதேசம் என்ற சொல் இவர்களுக்கு பொருந்துகிறது.அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகளை அமைக்கும் நகராட்சி நிர்வாகம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிப்பதில்லை.

இது குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தெருவிளக்குகளை பராமரிப்பது போன்ற பணிகளை நகராட்சிதான் செய்து வருகிறது.தானியங்கி முலம் இயங்கு்ம் இந்த விளக்குகளை சரியான முறையில் பராமரித்து மின்சாரத்தை சேமிக்க வேண்டு்ம் என்றார்.
நகராட்சி நிர்வாகம் விழித்து்க் கொள்ளுமா?