Thursday, October 3, 2013

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் புகழ்பெற்ற கீழக்கரை ஸ்பெஷல்(தொதல்,ஓட்டுமா..) பதார்த்தங்கள்!

தொதல்
கட்டுரையாளர் : சாதிகா

கீழக்கரையை  சேர்ந்த எழுத்தாளர்களில் முக்கிய பங்கு வகிக்கும் இவர் இலக்கிய நயத்துடன் பல்வேறு கட்டுரைகளை  எழுதி வருபவர்.பல ஆண்டுகளாக எழுத்து துறையில் முத்திரை பதித்து வருகிறார்.இவரின் பல கட்டுரைகள் பதிவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
_________________________________________________________________________________
தென்மாவட்டத்தில் இருக்கும் கீழக்கரையில் கிடைக்கும் தின்பண்டங்கள் மிகவும் புகழ்பெற்றவை.இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் இந்த இடுகையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அநேகப்பொருட்கள் ஒரு மாதத்திற்கும் மேலானாலும் கெடாது.இந்த தின்பண்டத்தின் பெயரை சொல்லி கடை கடையாக ஏறி இறங்கினாலும் பல  கிடைக்கவும் செய்யாது.குடிசைத்தொழில் போல் பல குடும்பங்கள் செய்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் கீழக்கரையை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல்ல பல ஊர்களை சேர்ந்தவர்களும் இவற்றின் சுவையை அறிந்து பலரும் வாங்கி செல்கிறார்கள்.சிலர் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் நடைபெறுகிறது.
முன்பெல்லாம் பாத்திரத்தை எடுத்து சென்று பதார்த்தங்கள் தயாரிக்கும் வீட்டிற்கு சென்று வாங்கி வந்தது போக இப்பொழுது  பாலிதின் கவரில் போடப்பட்டு வீட்டு வாசலுக்கே விற்பனைக்கு வந்து விட்டது.இப்பொழுது பாலிதின் கவரின் உபயோகத்தால் ஏற்படும் சுகாதரகேட்டின் விழிப்புணர்வால் அது அலுமினியம் ஃபாயில் பாக்கெட்டுகளுக்கு மாறிக்கொண்டு வருகின்றது.

சுவையும்,தரமும் மிக்க இந்த பதார்த்தங்கள் உலகில் பலபாகங்களில் வாழும் கீழை வாசிகள் மட்டுமல்ல அவர்களுக்கு பழக்கமான மற்ற ஊர்,மற்ற தேச நட்புக்களுக்கும் மிகவும் பிடித்தமான தின்பண்டமாகி விட்டது என்றால் மிகை ஆகாது.

கீழக்கரையை சுற்றி பெரும்பான்மையான தென்னந்தோப்புகள்,அவற்றில் லட்சக்கணக்கான மரங்கள் உள்ளன.முக்கியவிவசாயமாக தென்னை சாகுபடி அங்கு அந்தக்காலம் தொட்டே இருந்து வருகின்றது.கீழக்கரை மக்களின் உணவுகளில் அநேகமாக தேங்காய் கலந்தே இருக்கும்.இங்கு கீழே குறிப்பிடப்போகும் இனிப்புகள் அநேகமாக தேங்காய் சேர்ந்தவைகளே ஆகும்.
1.தொதல்


இதனை சிலர் லொதல் என்றும் கூறுகின்றனர்.எது சரியான பதம் என்று தெரியவில்லை.குழந்தைகள் கருப்பு அல்வா என்றும் செல்லமாக அழைப்பர்.இந்த தொதலில் வரலாறு கொழும்பில் இருந்துதான் ஆரம்பிக்கப்பட்டது.ஆம்.தொதலின் பூர்வீகம் கொழும்புதான்.அங்கிருந்து செல்லக்கனி என்பவர் செய்முறை அறிந்து இங்கு வந்து வியாபாரமாக்கியவர்.இப்பொழுது 40 - 50 குடும்பத்தினர் குடிசைதொழிலாக தயாரித்து வருகின்றனர்.கெட்டியான தேங்காய்ப்பால்,பனங்கருப்பட்டி சேர்த்து அல்வா பதத்திற்கு கிண்டி,வாசனைக்கு ஏலப்பொடியும்,அழகுக்கும்,சுவைக்கும் முந்திரி,உடைத்த பாசி பருப்பும் சேர்த்து சுவையை அள்ளும் ஒரு பதார்த்தம்.வலைப்பூவில் அசத்தும் அம்மணிகள் ஆர்வக்கோளாரால் தொதல் செய்முறைக்கு இறங்கி,அதன் பின் விளைவுகளுக்கு நான் பொருப்பல்ல:)ஏனெனில் என் சிறு வயதில் என் அம்மா இந்த தொதல் தயாரிப்பில் இறங்கி தேங்காய் துருவி பால் எடுத்து அதனை பெரிய வாணலியில் இட்டு காலையில் கிண்ட ஆரம்பித்தால் சட்டியை கீழே இறக்க மாலை ஆகி விட்டது.இதனை பார்த்து எங்கள் வீட்டில் எல்லோருக்கும்  சிறிது நாட்கள் தொதல் என்ற பெயரைக்கேட்டாலே அலர்ஜி ஆகிவிடும்.


2.கலகலா


பெயரைப்பார்த்ததும் ஏதோ வடநாட்டு பதார்த்தம் என்று எண்ணி விடாதீர்கள்.பக்கா தமிழக பதர்த்தம்தான்.இந்த இனிப்பை சுட்டெடுத்து பாத்திரத்தில் கொட்டினால் கலகல என்று ஒலி வரும் அதான் இப்பெயர் வந்ததோ என்னவோ?மைதா தேங்காய்ப்பால்,முட்டை,ஏலப்பொடி ,சர்க்கரை சேர்த்து செய்யப்படும் சுவையான இனிப்பு இது.சதுரம்,செவ்வகம்,டைமண்ட் நீள்சதுரம் என்று பல ஷேப்புகளில் கிடைக்கும்.இந்த முறை வாங்கி வந்த கலகலாவின் ஷேப் கன்னாபின்னா என்று இருந்தது போலவே சுவையும் கன்னாபின்னா என்று அடி தூள் கிளப்பி விட்டது.வாங்கி வந்து கொடுத்த உறவினரிடம் யார் வீட்டில் வாங்கினீர்கள் என்று கேட்டு வைத்துக்கொண்டேன்.ஊருக்கு சென்றால் உதவுமே:)இதிலே இனிப்பு சேராமல் காரப்பொடி சேர்த்து செய்வது காரக்கலகலா

3.பணியம்




அரிசிமாவு,தேங்காய்ப்பால் கொண்டு செய்யப்படும் முறுக்கு சுவை கொண்ட பதார்த்தம்.கீழக்கரையில் பணியக்காரத்தெரு என்றே ஒன்று உள்ளது.இரண்டு,மூன்று இஞ்ச் நீளத்திற்கு  தயாரித்து விற்கின்றனர்.திருமணச்சீரில் இதே பணியம் முக்கால் அடி நீளமாக உருவெடுத்து விடும்.இதனை சீப்புப்பணியம் என்றும் சொல்வார்கள்.

4.தேங்காய்ப்பால் முறுக்கு




பணியம் மாவில் சற்று மேக்அப் செய்து முறுக்காக சுற்றி விற்பனைசெய்கினறனர்.வாயில் போட்டால் கரைந்து விடும் என்பார்களே.அது இதற்கு பொருந்தும்.பல் இல்லாத பெரியவர்கள் முறுக்கு சாப்பிட விரும்பினால் இந்த முறுக்கை பயமில்லாமல் சுவைக்கலாம்.

5.வறுத்த மொச்சை




மொச்சைக்கொட்டையை ஊற வைத்து அதன் தோலை அகற்றி கரகரப்பாக பொரித்து உப்பு காரம் சேர்த்து வறுத்த கறிவேப்பிலை,முந்திரியால் அலங்கரித்து இருக்கும் சுவையான கறுக்மொறுக்.

6.நவதானியம்






7.வெள்ளை முறுக்கு


இடியாப்பமாவை குறிப்பிட்ட முறுக்கு அச்சில் போட்டு வட்டமாக பிழிந்து ஆவியில் வேகவைத்து வெயிலில் உலர்த்தி பிறகு எண்ணெயில் பொரித்து சாப்பிடும் முறுக்கு.சென்னைவாசிகள் இதனை வடாம் என்பார்கள்.ஆனால் இதனை எங்களூர் வாசிகள் ஒரு போதும் சாப்பாட்டுடன் சேர்க்கமாட்டார்கள்.தேனீருக்கு முன் சாப்பிடும் ஒரு நொறுக்ஸ்.வெளியூர் வாசிகள் இதனை பொரிக்காமல் வாங்கி வந்து தேவைப்படும் பொழுது பொரித்து சாப்பிடுவார்கள்.உள்ளூரில் பொரித்த வெள்ளை முறுக்கை வாங்கும் பொழுது அதனை பனை நாரில் கோர்த்து தருவது வித்தியாசமாக இருக்கும் இதன் சுவையைப்போலவே.

8.ஓட்டுமா



பசியை இது ஓட்டுமாஎன்றால் ஆம் கண்டிப்பாக ஓட்டும்.இரண்டே டீஸ்பூன் வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டால் பசி பறந்தோடி விடும் அதிசுவை உள்ள இனிப்பு பதார்த்தம்.அதனாலேயே வெளிநாட்டு வாழ் கீழை வாசிகள் கண்டிப்பாக இதனை வாங்கிச்செல்ல மறக்கமாட்டார்கள்.ஒரு தெலுங்கு நட்புக்கு ஊரில் இருந்து வாங்கி வந்து கொடுத்தேன்.உருவத்தைப்பார்த்ததும் முகத்தை சுளித்து இதனை எப்படி சாப்பிடுவது என்றார்.அப்படியே சாப்பிடலாம் என்று சொன்னாலும் அவருக்கு விரைவில் நம்பிக்கை வரவே இல்லை.ஆற்றுமணல் போல் உள்ளதே என்றார்.ஒரு ஸ்பூன் ஒரே ஸ்பூன்தான் எடுத்து பயத்துடன் வாயில் போட்டார் பாருங்கள்.அன்று ஆரம்பித்தது எனக்குஊருக்கு போகும் போதெல்லாம் ஓட்டுமா ஓட்டுமா என்று வாட்டி,ஓட்டி எடுத்து விடுவார்

இந்த ஊரில் புகழ்பெற்ற கிருஷ்ணாஸ்வீட் மைசூர்பாவுக்கு பற்பல ஆண்டுகளுக்கே முன்னரே பிரபலம் ஆன ராவியத்துகடை மைசூர் பாகு,எள்ளுருண்டை,கடலை உருண்டை,மறவர் முறுக்கு,அல்வா கருப்பட்டி,புல்லுக்கொழுக்கட்டை.ஒடியல் இப்படி எக்கசக்கமாக இருந்தாலும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

9 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்( வரஹ்)

    பகிர்தலுக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  2. கீழக்கரை அலி பாட்சாOctober 3, 2013 at 6:59 PM

    கட்டுரையாளர் சகோதரி ஜனாபா ஸாதிகா அவர்களின் பல் சுவையான தகவல்களை படிக்க வளைத் தளம்: www.shadiqah.blogspot.com

    தங்களுக்கும்,கட்டுரையாளருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால் இப்பதிவை பகிரவும்.

    ReplyDelete
  3. படங்களுடன் நல்ல ரசனையான எழுத்து நடை பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. சூப்பர் பகிர்வு,அனைத்து பலகாரமும் அருமை.

    ReplyDelete
  5. Very nice kilakaraiyiliruntu ippadi oru eluthalara ... we enjoyed your article . Mahroof dubai

    ReplyDelete
  6. aamaam!
    sako sadiqa !
    naanum pin thidarum pathivaalar...

    nantri sako..!
    sakothariyai kanniyapaduthiyamaikku...

    ReplyDelete
  7. Dodal came from Malay pepole (Malaysia &Indonasia)

    ReplyDelete
  8. ஸாதிகா அக்கா சூப்பரான பலகாரங்கள் , மிக அருமை

    ReplyDelete
  9. அந்த ஓட்டுமா பிளேட்ட மட்டும் இப்படி கொடுத்துடுங்க

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.