Tuesday, March 1, 2011

கீழக்கரை அருகே பயங்கரம் இளம்பெண் ஓட ஓட விரட்டி படுகொலை


கீழக்கரை, மார்ச் 1:திருப்புல்லாணி அருகே வீட்டில் குழந்தைகளுடன் தனியாக இருந்த பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புல்லாணி அருகே பொக்கானரேந்தலைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது முதல் மனைவி பூமாதேவி(21). இவர்களுக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை, 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர். தேரிருவேலி அருகே மருதகத்தைச் சேர்ந்த சுதா என்ற பெண்ணை கிருஷ்ணமூர்த்தி 2வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
திருப்புல்லாணி பெட்ரோல் பங்க் அருகே குடிசை வீட்டில் குழந்தைகளுடன் பூமாதேவி வசித்து வந்தார். நேற்று மதியம் 3 மணியளவில் டூவீலரில் வந்த 3 பேர், திடீரென வீட்டிற்குள் புகுந்து பூமாதேவியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய அவர், வீட்டை விட்டு வெளியே ரோட்டிற்கு ஓடி வந்தார். அவரது குழந்தைகளும் பயந்து அலறிக் கொண்டே பின்னால் ஓடி வந்தனர். விடாமல் விரட்டிய அந்த கும்பல் அரிவாளால் பூமாதேவியை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதனையடுத்து கொலையாளிகள் டூவீலரில் ஏறி தப்பிச் சென்றனர். ஒதுக்குப்புறமான பகுதி என்பதால் கொலை நடந்த போது அங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த திருப்புல்லாணி போலீசார், பூமாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணமூர்த்தியின் 2வது மனைவிக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.