Wednesday, November 13, 2013

நவ23ல் மதுரை - துபாய் நேரடி விமானம்! மகிழ்ச்சி வெளிப்படுத்திய அமீரகத்தில் வாழும் தென் மாவட்ட மக்கள்!




 ஜனவரி மாதம் துபாய் ஈடிஏ ஸ்டார் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநர் செய்யது எம் சலாஹீதீன் நேரடி விமான சேவையை வலியுறுத்தி பேசினார்.அருகில் மதுரை முன்னாள் எம்பி ராம்பாபு உள்ளார்.

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மதுரை- துபை விமான சேவை வரும் 23ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நேரடி தினசரி சேவையை ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் நவம்பர் 23ம் தேதி துவங்குகிறது. அதிகாலை 3.50 மணிக்கு துபையிலிருந்தும், நள்ளிரவு 11.35 மணிக்கு மதுரையிலிருந்தும் இந்த விமானம் புறப்படும்.தங்களது நீண்ட நாள் கனவான இச்சேவை துவங்கும் செய்தியால் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் தென் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

பல்லாண்டுகளாக பல்வேறு தரப்பினரும் இக்கோரிக்கையை தமிழகத்தில் வலியுறுத்தி வந்தனர் இது தொடர்பாக  ஈடிஏ அஸ்கான் ஸ்டார் நிறுவனம் சார்பில் துபாயிலும் தொடர்ச்சியாக பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.இக்கூட்டங்களில் தென் தமிழகத்திலிருந்து தொழில் முனைவோர்,சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து தங்கள் ஆதரவையும் ஆலோசனையும் தெரிவித்தனர்.
   துபை ETA ASCON STAR குழும நிர்வாக இயக்குநர் செய்யத் எம். சலாஹூத்தீன் அறிவுறுத்தலின் படி அமீரகத்தின் பல்வேறு தமிழ்ச் சங்கங்களும் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ். மீரான் தலைமையில், மத்திய அரசுக்கு இவ்விமான சேவையை துவங்க வலியுறுத்தி வந்தனர்.


சில மாதங்களுக்கு முன்னால் துபைக்கு வந்திருந்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை  இக்குழுவினர் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தியதன் பயனாக இந்தியாவிற்கும், வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான விமான நிலையங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையமும் சேர்க்கப்பட்டது.


இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மதுரை விமான நிலையம் சேர்க்கப்பட்டதனால் தான், மதுரை- வளைகுடாநாடுகளுக்கான நேரடி விமான சேவை சாத்தியமானது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் துபை வந்திருந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கைச் சந்தித்தும் மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவங்க கோரிக்கை வைத்தனர்.


 சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலி வந்திருந்த மத்திய இணையமைச்சர் நாராயண சாமியிடம், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் திருநெல்வேலி அமீர் கானுடன் சென்று இவ்விமான சேவை துவங்க கோரிக்கை மனு அளித்த மீரான், அமீரக அனைத்து தமிழர் சங்கங்களின் சார்பில் டெல்லியிலும் அவரைச் சந்தித்து இது சம்பந்தமாக வலியுறுத்தினார். தென் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ராம சுப்பு மற்றும் மாணிக் தாக்கூர் ஆகியோரும் தொடர்ந்து இது சம்பந்தமாக மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர்.

 அமீரகத்தின் அனைத்து தமிழ்ச் சங்கங்களும் தங்களது கோரிக்கையை ஏற்று மதுரை- துபை நேரடி விமான சேவையைத் துவக்க ஆவன செய்த மத்திய அரசாங்கத்திற்கும், குறிப்பாக மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜீத் சிங்கிற்கும், ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நீண்ட நாள் கழித்து விடுமுறையில் தங்களது உறவினர்களைப் பார்ப்பதற்கு தாயகம் வரும் தென் தமிழக மக்கள் இது வரை தொலை தூர விமான நிலையங்களுக்கு வந்து, ரயில், பஸ்களைப் பிடித்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர். இதனால் கால விரயமும், அதிகமான பொருளாதார செலவும் ஏற்பட்டு வந்தது. மதுரை- துபை நேரடி விமானச் சேவை மூலம் இச்சிரமங்கள் பெருமளவு குறையும்.
 குறிப்பாக தொழிலாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும் என்று துபாயில் வாழும் தமிழகத்தை சேர்ந்தோர் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த துபாயில் பணிபுரியும் யாசர் அராபாத் கூறுகையில்,

மிகவும் பயனுள்ள விமான வழித்தடம் .இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நெல்லை மாவட்டம் மேலப்பளையத்தை சேர்ந்த இப்திகார் கூறுகையில்,

மிகவும் மகிழ்ச்சியான செய்தி மதுரை - துபாய் நேரடி விமானம் மூலம் பயண சிரமமும்,பொருளாதரம் விரையமாவதும் குறையும்
 விரைவிலேயே ஏர் இந்தியாவும் மதுரை- துபை சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.