Sunday, November 10, 2013

தாசிம்பீவி கல்லூரி மாணவியர் பதநீரிலிருந்து தயாரித்த புதிய வகை சர்க்கரை! செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை!


   கீழக்கரை தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மனையியல் துறை மாணவிகள் பதநீரிலிருந்து பாம் சுகர் என்ற புதிய வகை சர்க்கரையை கண்டு பிடித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை மரங்களை வெட்டி விறகாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

பனைத்தொழிலுக்கு புத்துயிரூட்டும் முயற்சியாக, பதநீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்ட கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் பிரிவு மாணவிகள் அதில் வெற்றி கண்டுள்ளனர்.

வெட்டி எடுத்து செல்லப்படும் பனைமரங்கள்
  இதுகுறித்து இக்கல்லூரி முதல்வர் சுமையா தாவூத் கூறியதாவது:
பதநீரிலிருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு முழு நிலையை அடைய 30 முதல் 40 நாள்கள் வரை ஆகிறது. இதனால் இத்தொழிலில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. வருமானக் குறைவால் பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இயற்கையை காக்கும் நோக்கத்துடன் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இக் கல்லூரி மனையியல் துறை மாணவிகள் புதிய தொழில் நுட்பத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்காதபடி பதநீரிலிருந்து பாம் சுகர் என்ற சர்க்கரையை (பவுடர் போல உள்ளது) கண்டு பிடித்துள்ளனர்.
  இயற்கையான பச்சை தாவரத் தண்டுகள், இலைகளை பதநீரில் போட்டு கெடாத வகையில் இயந்திரத்தின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட அளவு பாம் சுகர் தயாரிக்க முடியும். இதை தயாரிப்பது குறித்து கிராம மக்களுக்கு பயிற்சி அளித்தால் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
 எங்களது ஆய்வுக்காக 75 லிட்டர் பதநீரில் 3 கிலோ பாம் சுகர் தயாரிக்கும் அளவில் இயந்திரம் தயாரித்துள்ளோம். இதற்கு ரூ. 5.25 லட்சம்  செலவானது. இதை பெரிய அளவிலும் செய்ய முடியும். பால் கூட்டுறவு சங்கத்தைப் போல் பதநீருக்கும் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி இத் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.