Tuesday, July 30, 2013

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே 4 வழி சாலை அமைக்க ரூ 406 கோடி ஒதுக்கீடு! அமைச்சர் சுந்தரராஜ் தகவல்!


ராமநாதபுரம் & தூத்துக்குடி இடையே ரூ.406 கோடியில் விரைவில் 4 வழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் சுந்தரராஜ் பேசினார்.

கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து கட்டப்பட்ட கலை அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி பாக்கியநாதன் தலைமை வகித்தார்.

அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர் முனியாண்டி, துணை செயலாளர் செல்வக்குமார், தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் முனியம்மாள் செல்வக்குமார், புல்லந்தை செயலாளர் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாயாகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரராஜ் வரவேற்றார்.

கலை அரங்கத்தை திறந்து வைத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் பேசியதாவது:

ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு ரூ.406 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் துவங்கும்.

மின்சார தட்டுபாட்டை போக்குவதற்காக உப்பூரில் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 1,500 மெகாவாட் மின் சாரம் தயாரிக்க அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

ஏர்வாடி தர்காவில் வெளி மாவட்டத்தை சேர்ந்த மன நோயாளிகள் கவனிப்பாரின்றி நடு ரோட் டில் அலைந்து திரிகின்றனர். இங்கு அரசு சார்பில் விரை வில் மனநல காப்பகம் அமைக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார். விழாவில் கீழக்கரை நகர் செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் சரவணா பாலாஜி, ஜகுபர் ஹூசைன், சிறுபான்மை செயலாளர் யாசீன், குமரன், நகராட்சி துணைத் தலைவர் ஹாஜாமுகைதீன் கடலாடி ஒன்றியக் குழு தலைவர் மூக்கையா, இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரன், முருகன், அரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.