Wednesday, March 28, 2012

கீழக்கரை பகுதியில் அழிந்து வரும் தென்னை விவசாயம்! விழித்துகொள்ளுமா விவசாயத்துறை ?


பட விளக்கம் : கீழக்கரை அருகே மாயாகுளம் செல்லும் வழியில் தனியார் தோட்டத்தில் அமைந்திருந்த நான்கு கிளையுடன் கூடிய தென்னை மரம் (பழைய படம்)



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ,ஏர்வாடி,காஞ்சிரங்குடி,மாயாகுளம்,மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.நூற்றுக்கணக்கானோர் இப்பகுதியில் தென்னை விவாசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .ஆண்டுதோறும் லட்சக்கணக்கான‌ தேங்காய்கள் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு ஏற்றுமதியாகி வந்தன.ஆனால் தொடர்ந்து ஏற்படும் பல்வேறு சிரமங்களால் பெரும்பாலானோர் தென்னை விவாசாயத்தை விட்டு வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு'என்பார்கள் ஆனால் "தென்னையை வளர்த்தாலும் கண்ணீர்தான் என்கிறார்கள்.இப்பகுதி தென்னை விவசாயிகள்.

இது குறித்து தென்னை விவசாயம் செய்யும் சித்தீக் என்பவர் கூறியதாவது,

பல்லாண்டு காலமாக‌ தென்னந்தோப்பு வைத்துள்ளோம்.இப்ப‌ சரியான காய்ப்பும் இல்லை. தண்ணியும் உப்பாகிப் போச்சு. இருந்தாலும் விடாம விவசாயம் செய்யுறோம். நஷ்டமானாலும் தொடர்ந்து செய்யுறோம்.ஆனா, வேளாண்துறையோ எங்களுக்கு எந்த விதமான நன்மையும் செய்யுறதில்லை.நஷ்டம் சரியாயிரும்ங்கற நம்பிக்கை இருக்கு ஆனால் எவ்வளவு காலத்துக்குத்தான் நஷ்டத்துல செய்ய முடியும்னு தெரியல அவ்வப்போது தென்னைகளுக்கு வாடல் நோய் வந்திடுது. காண்டாமிருக வண்டு வந்து தென்னைகளை நாசம் பண்ணுது. இதுக்கு கண்டிப்பா அரசு எங்களுக்கு நஷ்ட ஈடு தரணும்.கீழக்கரையில் அரசு தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.அடிக்கடி தென்னை விளைபொருட்கள் கண்காட்சி நடத்தலாம் இதன் மூலம் ஏராளமான மொத்த‌ வியாபாரிகள் வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றார்.


தென்னை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கேரளாவில் பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அரசு அவர்களுக்கு அனைத்துவிதமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. ஏற்றுமதிக்கான சந்தைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளது. மேலும் தென்னைக் கழிவுகளில், பல வகையான பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு எடுத்து செல்கிறது.இதனால் அங்கு தென்னை விவசாயம் பெருகுகிறது.

இப்பகுதியில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகள் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தென்னை விவாசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் தொடர்ந்து நஷ்டத்தை விவாசாயிகள் சந்திப்பார்களேயானால் அவர்கள் அத்தொழிலிருந்து விலகி தற்போது மிஞ்சியிருக்கும் தென்னந்தோப்புகளும் அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும்.இப்பகுதி விவசாயத்துறை விழித்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.